வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடாது.. தினகரன் சொல்லும் காரணத்தை பாருங்க!
விருத்தாசலம்: வேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடாது என தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பிரமுகர்கள் வீட்டில் பணம் பிடிபட்டதால் வேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் வழக்கு தொடர்ந்தார். எனினும் சண்முகத்துக்கு சாதகமான தீர்ப்பு ஏதும் வரவில்லை. இதனால் வாக்குப் பதிவு நடந்த நாளில் ஏசி சண்முகம் குலுங்கி குலுங்கி அழுதார்.
அதிமுக, திமுக போட்டி
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியின் தலைவர் ஏசி சண்முகமும், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.
அமமுக போட்டியில்லை
இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அமமுக முடிவு செய்துள்ளது.
சிக்கலானது
வேலூர் லோக்சபா தேர்தலை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடுவது சற்று சிக்கலாக இருக்கிறது.
குக்கர் சின்னம்
எனவே கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்தவுடன் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தினகரன். ஏற்கெனவே ஆர் கே நகர் சட்டசபை இடைதேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.
பின்னடைவு
தற்போது பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் பெரும்பாலான அமமுக வேட்பாளர்கள் அதிமுகவை சார்ந்தவர்கள் என கருதியே இரட்டை இலைக்கு மக்கள் வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஒரு பின்னடைவை தவிர்க்கவே இந்த முடிவு என தெரிகிறது.