முதலமைச்சர் கான்வாய்க்குள் பாய்ந்த நபர்... பதறிப்போன போலீஸ்... மடக்கிப்பிடித்து விசாரணை
வேலூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாயை மறித்து தகராறில் ஈடுபட்ட சுதாகர் என்பவரை கைது செய்து ராணிப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை புதிய மாவட்டம் தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்ட போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.
முதலமைச்சர் காரை மறித்த சுதாகர் என்பவரை அதிமுகவினர் தான் பணம் கொடுத்து கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கோரிக்கை
வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு அதன் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுவிட்டு சென்னை புறப்பட்ட போது அவரது கான்வாய்க்குள் பாய்ந்த நபர் தனது கோரிக்கையை முழக்கமாக எழுப்பினார்.
விசாரணை
இதனால் ஒரு நிமிடம் ஆடிப்போன போலீஸார் அந்த நபரை மடக்கிப்பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி கான்வாய் செல்ல வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் முதலமைச்சரின் காரை மறித்தது மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பதும், அவருக்கு கடன் கொடுத்தவர்கள் மிரட்டல் விடுப்பதால் அது பற்றி முதல்வரிடம் புகார் கொடுக்க முயன்றதும் தெரிய வந்தது.
போலீஸ் கெடுபிடி
இதனிடையே சுதாகரை நாங்கள் தான் முதலமைச்சர் கூட்டத்துக்கு அழைத்து வந்தோம், வந்த இடத்தில் அவர் இப்படி நடந்துகொண்டார், விட்டுவிடுங்கள் என லோக்கல் அதிமுக நிர்வாகிகள் போலீஸிடம் பேசியுள்ளனர். ஆனால், முதல்வரின் பாதுகாப்பு விவகாரம் என்பதால் அப்படியெல்லாம் நீங்கள் சொன்னவுடன் விட்டுவிட முடியாது அவரிடம் விசாரணை நடத்துவோம் என போலீஸ் கறாராக கூறிவிட்டது.
கடன் சுமை
போலீஸார் சுதாகரிடம் நடத்திய விசாரணையில், அவரிடம் கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு கடன் கொடுத்தவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது பற்றி புகார் அளித்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் முதல்வரிடம் இது பற்றி பேச முயன்றதாகவும் சுதாகர் கூறியுள்ளார்.