வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் எப்போது... புதிய அப்டேட்
வேலூர்: வாக்கு எண்ணிக்கை முடிந்து 2 மாதம் கழித்து தான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது.
வேலூர் மக்களவைத் தேர்தலின் போது, திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.
அதிரடி பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளி மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
அதில், பெட்டி, பெட்டியாக கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், வேலூரில் பிடிபட்ட பணம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர். விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள்.
அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். ஆக, இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.