அட கொடுமையே.. "ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன்".. செம வாக்குறுதி "செல்லம்"!
ரெட் லைட் ஏரியா கொண்டு வருவேன் என சுயேச்சை வேட்பாளர் தெரிவித்துள்ளார்
Recommended Video
வேலூர்: இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் தேர்தலில் போட்டியிடும் உரிமை முதல் பேச்சுரிமை வரை உள்ளன. அதேபோல சகிப்புத்தன்மை உடைய நாடு என்பதையும் நாம் மறுக்க முடியாது. எனவே சில சுயேச்சைகளின் செயல்பாடுகளை விமர்சிக்க முடிவதில்லை. அப்படி ஒரு நிலைமை நமக்கு வேலூர் தொகுதி சுயேச்சை விவகாரத்திலும் ஏற்பட்டிருக்கிறது!
வேலூரில் எம்பி தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்க போகிறது. இதற்கு அஇதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகள் களம் இறங்க உள்ளன. இதில் சில சுயேச்சைகளும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத்தாக்கலின் கடைசி நாளில்கூட 33 பேர் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மாநில தலைவர் செல்லப்பாண்டியனும் மனு தாக்கல் செய்தார். அவர் மனு தாக்கல் செய்ய வரும்போதே வித்தியாசமாக வந்தார்.
கழுத்தில் கொய்யா பழம் மாலை அணிந்து கொண்டே உள்ளே வந்தார். அப்படியே போய் வேட்பு மனு தாக்கல் செய்ய போனார். இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, "மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அதனால்தான் அதை வலியுறுத்தி கொய்யா பழம் அணிந்து வந்தேன்" என்றார்.
பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தார். அப்போது, நீங்கள் தொகுதி மக்களுக்கு செய்யும் நன்மை என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு செல்லப்பாண்டியன், "எல்லா டாஸ்மாக் கடைகளிலும் தரமான சரக்கு கிடைக்க செய்வேன், ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்று பகீர் வாக்குறுதிகளை அசால்ட்டாக சொல்லி விட்டு போனார்.
செல்ல பாண்டியன் வாயைத் திறந்தாலே (மது வாடை வருவது ஒரு பக்கம்) வாக்குறுதிகளை அள்ளி தெளிப்பது ரொம்ப சகஜமானது. அதேபோல கோரிக்கைகளும் குண்டக்க மண்டக்காவென இருக்கும். இப்படிப்பட்டவர் வேலூர் தேர்தலில் நிற்பதால் அதிமுக, திமுக வேட்பாளர்கள் "ரொம்ப கவனமாக" இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்!