ஸ்டாலினை அப்போதே எச்சரித்தார்கள்.. துரைமுருகனால் விரக்தியில் நிர்வாகிகள்.. வேலூரில் நடந்தது என்ன?
வேலூரில் திமுகவின் ஓட்டுகள் குறைய உட்கட்சி பூசல்தான் காரணம் என்று திமுக நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.
Recommended Video
வேலூர்: வேலூரில் திமுகவின் ஓட்டுகள் குறைய உட்கட்சி பூசல்தான் காரணம் என்று திமுக நிர்வாகிகள் பேசிக்கொள்கிறார்கள்.
வேலூரில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஏறத்தாழ திமுகவின் வெற்றி வேலூரில் உறுதியாகிவிட்டது.
ஆனால் திமுகவின் வெற்றி அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. பல்வேறு சிக்கல்களை கடந்துதான் திமுக சார்பாக கதிர் ஆனந்த் எம்பியாக இருக்கிறார்.
முன்னேற்றம்
வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த தொடக்கத்தில் அதிமுகதான் முன்னிலை வகித்து வந்தது. ஒரு கட்டத்தில் அதிமுக வெற்றிபெற்றுவிடும் என்று கூட பலர் கருதினார்கள். முக்கியமாக அதிமுக 16000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற போது, திமுகவின் வெற்றி பெரிய சந்தேகமாக இருந்தது.
இப்போது என்ன
ஆனால் 7 மற்றும் 8 வது சுற்றுகளில் திமுக முன்னிலை வகிக்க தொடங்கியது. இன்னும் 15000 ஓட்டுகள் மட்டுமே எண்ண வேண்டும் என்பதால் பெரும்பாலும் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வேலூரில் திமுக பெறப்போகும் இந்த வெற்றி என்பது சாதனை வெற்றி கிடையாது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் திமுகவிற்கு இது சோதனை வெற்றியாகும்.
எப்படி சோதனை
திமுக இங்கு 50 ஆயிரம் வாக்குகளால் வித்தியாசத்தில் வெல்லும் என்றுதான் அரசியல் வல்லுநர்கள் கணித்தனர். அதுவும் துரைமுருகன் மகன் என்பதால் கண்டிப்பாக வெற்றி உறுதி என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அவரே திக்கி திணறி வெற்றியை நோக்கி ஊர்ந்து செல்கிறார் என்பது திமுகவில் பலருக்கும் அதிர்த்தி அளித்துள்ளது.
திமுக உட்கட்சி பூசல்
வேலூரில் திமுகவில் நிலவிய உட்கட்சி பூசல்தான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்கிறார்கள். கதிர் ஆனந்த்திற்கு போட்டியிட வாய்ப்பு அளித்தது, வேலூர் திமுகவில் உள்ள சில முக்கிய உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் அப்போதே இதற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் துரைமுருகன் திமுக தலைமையிடம் கடும் அழுத்தம் கொடுத்து தனது மகனை போட்டியிட வைத்துள்ளார்.
எச்சரிக்கை
இது தொடர்பாக அப்போதே ஸ்டாலினுக்கு வேலூர் திமுக நிர்வாகிகள் சிலர் எச்சரிக்கை கடிதமும் அனுப்பி உள்ளனர். கதிர் ஆனந்த் போட்டியிட்டால் பெரும்பாலும் தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டார்கள். நமக்குத்தான் சிக்கல் ஆகும் என்று கூறி உள்ளனர். ஆனால் அனைத்தையும் மீறித்தான் ஸ்டாலின் கதிர் ஆனந்தை தேர்தலில் போட்டியிட வைத்தார்.
தற்போது அதுதான்
தற்போது அவர்கள் எச்சரித்தது போலவே திமுகவின் வாக்கு எதிர்பார்த்ததை விட குறைவாக வேலூரில் பதிவாகி உள்ளது. இதுதான் அங்கு இழுபறிக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறுகிறார்கள். திமுகவின் இந்த உட்கட்சி பூசல் எதிர்காலத்தில் பிரளயம் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.