வேலூர் தேர்தல் முடிவு திமுகவுக்கு பின்னடைவு.. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு பரபர கருத்து
சென்னை: வேலூர் தேர்தல் திமுகவுக்கு பின்னடைவுதான் என்று விடுதலை கட்சிகள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, வன்னி அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த லோக்சபா பொதுத்தேர்தல் முதலே, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்த கட்சி சார்பில் விழுப்புரம் லோக்சபா தொகுதியில் ரவிக்குமார் போட்டியிட்டார். அவர் திமுகவின் சின்னமான உதயசூரியனில் களமிறங்கினார்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியில் பானை தனி சின்னத்தில் போட்டியிட்டார். பிற தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் சிதம்பரம் தொகுதியில் கடும் இழுபறி நிலை நீடித்தது. நள்ளிரவு வரை வாக்குகள் எண்ணப்பட்டன. 3219 வாக்குகள் முன்னிலையில் மட்டுமே திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேலூர் தொகுதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு வன்னியரசு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: சில மாதங்கள் முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வாக்குகளை பெற்றது. ஆனால், வேலூரில் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வெற்றியை பெற்று இருப்பது என்பது திமுகவுக்கு பின்னடைவுதான்.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை தோல்வியடையச் செய்து விட வேண்டும் என்று மதவாத சக்திகளும், ஜாதியவாதிகளும் தீவிரமாக முயற்சிகளை எடுத்தனர்.
ஆனால், வேலூரில் அதுபோன்ற முயற்சி நடைபெறவில்லை. இருப்பினும் வாக்கு வித்தியாசம் என்பது குறைவாக இருப்பது கவனிக்கப்படவேண்டியது. துரைமுருகன் கேலியும், கிண்டலும் செய்து பேசுவது, ஜனநாயக முறையில் நடந்து கொள்ளாதது போன்ற தனி நபர் விஷயங்கள் திமுகவுக்கு பின்னடைவாக போயிருக்கலாம். இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், வேலூரில் வெற்றி பெற்றுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் பொன்முடி தெரிவித்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு இந்த தேர்தல் முடிவு திமுக வுக்கு பின்னடைவு என்று தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.