வேலூரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்.. அரசுக்கு கருணாஸ் முக்கிய கோரிக்கை
வேலூர்: வேலூரில் மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்ததால் கல்லால் அடித்து கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த இளைஞர் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 15 நாள்களுக்கு முன்பு சபாநாயகரிடம் மக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரியும் அனுமதி அளிக்கப்படவில்லை.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜுன் மாதம் 16 தேதி ஒடுக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிரபு என்ற இளைஞர் மாற்றுசாதி பெண்ணை திருமணம் செய்த காரணத்தால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அவரது குடும்பத்திற்கு 25லட்சம் ரூபாய் வழங்கி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கோரிக்கையாக வைத்தேன். அவர்கள் மதியத்திற்கு மேல் பேச அனுமதி வழங்குவதாக சொல்லியிருக்கிறார்கள்.
சாதி சான்றிதழில் சீர் மரபினர் சான்றிதழை வாங்கி கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு அனைத்து கணிணிமயமாக்கப்பட்ட அலுவலங்களிலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்றார்.
இதனிடையே இளைஞர் பிரபு விவாகரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டதாக தனது பேட்டியில் கருணாஸ் குற்றம்சாட்டினார்.