என் அப்பா நல்லாதான் இருக்காரு.. அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. விஜயபிரபாகரன் கண்ணீர் பேச்சு!
விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்
Recommended Video
வேலூர்: "என் அப்பா நல்லாதான் இருக்காரு.. அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. தை மாசம் முடியட்டும்.. எப்படி வறார்னு பாருங்க" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கண்ணீர்மல்க பேசி உள்ளார்.
நேற்று முன்தினம் விஜயகாந்த்துக்கு பிறந்த நாள். அப்போது கட்சி ஆபிசில் நலத்திட்ட உதவி வழங்க வந்திருந்தபோது, நிலைதடுமாறி விழுந்துவிட்டார்.
இந்த காட்சி வீடியோவாகவும் வெளியானதுடன், விஜயகாந்த் உடம்புக்கு என்ன ஆச்சோ என்ற பதைபதைப்பையும், டென்ஷனையும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இது சம்பந்தமான செய்திகளும் பரபரப்பாக வெளிவந்த நிலையில், விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மகன் தெளிவுபடுத்தி உள்ளார்.
வேலூர் மாவட்டம் உமராபாத் பகுதியில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார். அப்போது பேசிய அவர், "என் அப்பா நல்லாதான் இருக்கார்... அவர் உடம்புக்கு ஒன்னும் இல்லை.. தை மாசத்துக்கு அப்பறம் பாருங்க.. அவர் எப்படி மீண்டு வருகிறார் என்று.
என் அப்பாவோட உடல் சூப்பரா இருக்கு. ஏன்னா.. அவதூறு பரப்புறாங்க.. இதை எல்லாம் தாங்கிட்டு, கட்சியை வழிநடத்திட்டு, சிங்கம் போல எங்க அம்மா, ஒரு பெண்மணியா இங்க எவ்ளோ போராடிட்டு இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியும். என்னுடைய இந்த கண்ணீரை, ஆனந்த கண்ணீரா நினைச்சுக்குங்க" என்று கண்ணீருடன் பேசினார்.
முன்னதாக, விஜயகாந்த்துக்காக அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருவரும் சேர்ந்து விலை உயர்ந்த கார்களில் ஒன்றான பி.எம்.டபிள்யூ காரை பரிசாக தந்துள்ளனர். இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட விஜயகாந்த் ஆனந்தக் கண்ணீர் மல்க இரு மகன்களையும் இருவரையும் கட்டி பிடித்துக் கொண்டார்.