மன நோய் சிகிச்சை பெற்றவர்களுக்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. சபாஷ் அரசு மருத்துவமனை!
வாலாஜாபேட்டை:மனநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை அவர்களது உறவினர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட வைத்து வீட்டுக்கு வழியனுப்பி நெகிழ்ந்துள்ளது தமிழகத்தில் உள்ள ஓர் அரசு மருத்துவ மனை நிர்வாகம்.
இந்த அசத்தல் பாராட்டை பெற்றிருப்பது வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைதான். பொதுவாக அரசு மருத்துவமனை என்றாலே அலர்ஜியடைந்து இன்றும் தனியார் மருத்துவமனையை அணுகுபவர்கள் தான் நம்மில் அதிகம்.
ஆனால், நவீன வசதிகளுடன், மேம்படுத்தப்பட்ட... பொலிவுடன் என ஏதோ புதிய திரையரங்கம் என்பது போன்ற தோற்றத்தில் காணப்படும் தனியார் மருத்துவ மனைகளில் கிடைக்காத தரமான, உயர்ரக சிகிச்சை அரசு மருத்துவ மனைகளில் கிடைக்கிறது.
மருத்துவமனையின் தரமான சிகிச்சை
மருத்துவமனையை பொலிவுடன் வைத்துக் கொள்வது, ஆட்கள் பற்றாக்குறை, ஊழியர்களின் அலட்சிய போக்கு என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசு மருத்துவமனையை குறைசொல்பவர்களும் அதிகம். ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்கு இன்றளவும் கை கொடுக்கும் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சையோடு அன்பான அரவணைப்பும் கிடைக்கிறது என்பது பலரும் அறிந்திராத செய்தி.
சிகிச்சைக்கென தனி பிரிவு
அத்தகைய கனிவான அரவணைப்பு, அதனோடு தொடர்புடைய நேசத்தை இங்கே நமது கண்முன் காட்டியுள்ளது வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் மனநோயாளிகளின் சிகிக்சைக்கு என்று தனியாக ஒரு பிரிவு இயங்கி வருகிறது. சாலைகளில் யாருடைய ஆதரவும் இன்றி தனித்துவிடப்பட்டவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது அந்த பிரிவின் அளப்பறிய பணியாகும்.
உயர்தர சிகிச்சை
அதன் அடிப்படையில் 30க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் சீரிய முயற்சி, உயர் ரக சிகிச்சை ஆகிய அம்சங்களினால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் முழுமையாக குணமடைந்தனர்.
குணமடைந்த நோயாளிகள்
இதையடுத்து, அகமகிழ்ந்த மருத்துவமனை நிர்வாகம் சும்மா இருந்து விட வில்லை. உடனடியாக களத்தில் இறங்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்களின் உறவினர்களை தேடும் முயற்சியில் களமிறங்கி வெற்றியும் கண்டது. அவர்களும் மருத்துவமனைக்கு அழைக்கப்பட... தமது உறவினர்களை குணமடைந்தவர்கள் அடையாளம் காட்ட... ஆனந்த மழை.
புத்தாண்டு கொண்டாட்டம்
அதோடு நின்றுவிடவில்லை மருத்துவமனை நிர்வாகம்... குணம் அடைந்தவர்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் வருகின்ற 2019 புத்தாண்டு விழா முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி, உறவினர்களுடன் அவர்களை அனுப்பி வைத்துள்ளது. தவிர, சிகிச்சைக்கு பிறகும் அவர்கள் சில காலம் எடுக்க வேண்டிய மருந்துகளையும், அதன் அவசியத்தையும் மருத்துவர்கள் கூறியது தான் ஹைலைட்.
வாழ்த்திய மருத்துவர்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புத்தாண்டு வரவு என்ற கேளிக்கைகளோடு கேக் வெட்டி மகிழ்ச்சியில் திளைத்தனர் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள். தொண்டு நிறுவனம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள். செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று மீண்டவர்களை வாழ்த்தி அனுப்பினர்.
மக்கள் வாழ்த்து
தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் உழன்று கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதர்களை பெரிய குழந்தைகள் என்கிறது மருத்துவ உலகம். அந்த குழந்தைகளும், கடவுளும் ஒன்று என்று உவமை கூறப்பட்டாலும்... இந்த வளர்ந்த குழந்தைகளுக்கு என்னவோ கடவுள் என்பவர்கள் அந்த மருத்துவர்கள் தான்.. தேவையை முன்வைக்காமல் சேவையை முன்னிலைப்படுத்தும் அவர்களுக்கு வாலாஜாப்பேட்டை மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்... இந்த செய்தியின் வழியே...