என்னாது... எங்களால் வேலூரில் தேர்தல் நின்றுபோனதா?.. இது சரியல்ல.. துரைமுருகன் காட்டம்
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நின்றுபோனதற்கு நாங்கள் காரணமல்ல என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கினார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். அவரை எதிர்த்து திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் திமுக உறுப்பினருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனையில் ரூ.11 கோடிக்கு மேல் பணம் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில், அந்த தொகுதியில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று திமுக மீண்டும் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், வேலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எங்களால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நின்றுபோனது என்று கூறுவது சரியல்ல. எங்கள் மீது எந்த தவறும் இல்லை. எங்கள் வீட்டிலும், கல்லூரியிலும் சோதனையிட்டு எதுவும் பிடிபடவில்லை என்று வருமான வரித்துறையினர் எழுதி கொடுத்து சென்றனர் என்றார்.
மேலும், எங்களுக்கும், வருமான வரித்துறையினருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் தற்காலிகமான ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, லஞ்ச லாவண்யம், அதிகமாக உள்ளது. இவற்றை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று பேசினார்.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் எனது மகன் கதிர் ஆனந்த் வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்றும் கூறினார்.