வேலூர் பக்கமே செல்லவில்லையே.. கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை.. கதிர் ஆனந்த் அளித்த பதில்!
வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக எம்பி கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக எம்பி கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
நாளை வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் வேலூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். அதேபோல் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்றோடு பிரச்சாரம் முடிந்தது. ஆனால் இந்த பிரச்சாரம் முழுக்க திமுக சார்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், எம்பியுமான கனிமொழி பிரச்சாரம் செய்யவே இல்லை. வேலூர் தொகுதி பக்கமே அவர் செல்லவில்லை.
இதனால் திமுகவில் கனிமொழி புறக்கணிக்கப்படுகிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இது ஏன் என்று தற்போது வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
அதில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால் கனிமொழியால் பரப்புரைக்கு வரமுடியவில்லை. பரப்புரையில் பங்கேற்காவிடினும் அன்றாட நிகழ்வுகளை தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்வார்.
நாடளுமன்றத்தில் நிறைய பணிகள் இருக்கிறது. தினமும் அங்கு நிறைய மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனால் கனிமொழியால் தமிழகத்திற்கு வந்து செல்ல முடியவில்லை. இதற்கு பின் வேறு எந்த விதமான காரணமும் இல்லை என்று, கதிர் ஆனந்த் விளக்கி உள்ளார்.