மசாலா கம்பெனி ஓனர் மீது காதல்.. கணவர் கை காலை கட்டி.. துப்பட்டாவில் தொங்க விட்ட கொடூர மனைவி
கணவனை கொன்ற மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
வேலூர்: "போதையில் இருந்த கணவனின் கழுத்தை நெரித்து.. கையை, காலை கட்டி... அடித்து கொன்று... என் துப்பட்டாவில் தூக்கில் தொங்க விட்டேன்" என்று மனைவி வாக்குமூலம் தந்துள்ளார். இவ்வளவும் தன்னுடைய மசாலா கம்பெனி ஓனர் மேல் உள்ள காதலுக்காகத்தான்!
வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பவானி. சரவணன், சைக்கிள் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
ஆனால் சரவணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் பவானியுடன் தகராறு செய்துள்ளார். சில சமயம் போதையில் கண்மண் தெரியாமல் அடித்தும் உள்ளார்.
துப்பட்டா
இந்நிலையில் கடந்த மே மாதம் சரவணன் தனது வீட்டில், பவானியின் துப்பட்டாவால் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதை கண்டு பவானி கதறி அழுதார். தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, அந்த கோபத்தில் தூக்கில் தொங்கியதாக ஒப்பாரி வைத்தார். எனினும் இவர் மீது போலீசாருக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
போஸ்ட் மார்ட்டம்
பின்னர், போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில், கழுத்தை நெரித்தும், கடுமையாக தாக்கியும் சரவணன் கொலை செய்யப்பட்டிருப்பதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. இதையடுத்து, பவானியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான், கணவனை கொன்றதை பவானி ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் பவானி சொன்னதாவது:
ஓனர் வேலாயுதம்
"நான் வேலாயுதம் என்பவரின் மசாலா கம்பெனியில் வேலை பார்க்கிறேன். இதனால் எனக்கும் வேலாயுதத்திற்கும் நெருக்கம் ஏற்பட்டது. என் வீட்டுக்கு அடிக்கடி ஓனர் வந்து போவார். இதை என் கணவர் கண்டித்தார். ஆனால் நாங்கள் கேட்கவில்லை. எங்கள் இருவரையும் பிரிப்பதிலேயே குறியாக இருந்தார். அதனால்தான் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.
பிளாஸ்டிக் ஒயர்
சம்பவத்தன்று வழக்கம்போல போதையில் வீட்டுக்கு வந்தார். முதலில் பிளாஸ்டிக் ஒயர் மூலம் கழுத்தை நெரித்தோம். பிறகு, கையை, காலை கட்டி... பிளாஸ்டிக் பைப் மூலம் அடித்தே கொன்றோம். அதற்கு பிறகுதான் என் துப்பட்டாவை எடுத்து, அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டோம்" என்றார். இதையடுத்து, காதல் ஜோடியை போலீசார் கைது செய்து உள்ளனர்.