குடிச்சிட்டு அடிச்சான்... கொன்று புதைத்தேன் - ஆற்காடு போலீசை அதிர வைத்த பெண்
கணவன் குழந்தையை கொன்று ஏரியில் புதைத்து விட்டு காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
வேலூர்: காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பியையும் அவரது ஒரு வயது பிள்ளையையும் காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் லட்சுமி என்ற இளம் பெண். அந்த புகாரின் பேரில் விசாரித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. மாயமானதாக தேடப்பட்டு வந்த ராஜாவும் அவரது குழந்தையும் அருகில் இருந்த ஏரியில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்தது அவரது காதல் மனைவிதான் என்பதுதான் இதில் முக்கிய திருப்பம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்புரா மந்தைவெளியைச் சேர்ந்த ராஜா எலக்ட்ரீசனாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தீபிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு பிரணீஸ் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது.
கடந்த 13ஆம் தேதி முதல் தனது கணவரையும், குழந்தையையும் காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் கூறி அழுதிருக்கிறார். அதை உண்மை என்று நம்பி ராஜாவின் அக்கா லட்சுமி, ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் தீவிரமாக விசாரணையை தொடங்கினர்.
புலன் விசாரணை
காவல்துறையினர் முதலில் விசாரணையைத் தொடங்கியது தீபிகாவிடம் இருந்துதான். ராஜாவின் செல்போன் நம்பரை சொல்லுங்க அதை வச்சு கண்டுபிடிக்கலாம் என்று போலீசார் கேட்ட போது, போனை வீட்டிலேயே விட்டு போய் விட்டதாக கூறினார் தீபிகா.
மழுப்பிய தீபிகா
போலீசாரின் பல கேள்விகளுக்க முன்னுக்குப் பின் முரணாகவே பேசியிருக்கிறார். இதனையடுத்து தங்கள் பாணியில் விசாரணையைத் தொடங்க, என் புருஷனை நானே கொன்னு ஏரியில புதைச்சிட்டேன் என்று கூறி அதிரவைத்தார்.
காதல் திருமணம் கசந்தது ஏன்
காதல் திருமணம் செய்து கொண்டாலும் சில மாதங்களில் கசந்து போனது. காரணம் குடித்து விட்டு வந்து தினமும் ராஜா அடிப்பாராம். அந்த கொடுமை தாங்க முடியாமலேயே கொன்றதாக கூறியிருக்கிறார் தீபிகா. தான் ஜெயிலுக்குப் போனால் குழந்தையை கொலைகாரியின் குழந்தை என்று பேசுவார்கள் என்பதால் பிள்ளையையும் கொன்று விட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
கூட்டாளி யார்
தீபிகா மட்டுமே கொலை செய்து ஏரி வரை கொண்டு போய் புதைத்திருக்க முடியாது இந்த கொலையில் கூட்டாளிகளாக உடன் இருந்தது யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது கள்ளக்காதலால் நேர்ந்த கொலையா என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சடலத்தை தோண்டும் போலீஸ்
ராஜாவையும், குழந்தை பிரணீசையும் புதைத்தாக தீபிகா கூறிய இடத்தில் காவல்துறையினர் தோண்டி வருகின்றனர். சடலம் கிடைத்து பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே கொலை நடந்த விதம் பற்றி தெரியவரும். காதல் கணவரையும், குழந்தையையும் இளம் பெண் கொன்று புதைத்த சம்பவம் ஆற்காடு சுற்றுவட்டாரா பகுதிகளில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.