பணம் வீணாகக் கூடாது..பட்ஜெட்டுக்கு முன் விரைவாக முடிங்க..அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஒதுக்கப்படும் நிதியை விட குறைந்த செலவில் திட்டங்களை முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர்: பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஆட்சியர்கள் தடுக்க வேண்டும். பணிகளை ஆட்சியர்கள் கவனமாக கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஒதுக்கப்படும் நிதியை விட குறைந்த செலவில் திட்டங்களை முடிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பாகவே மக்களிடம் மனு வாங்கினார் ஸ்டாலின். தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களாகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு பற்றி ஆய்வு செய்தார். மக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்தும், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.
கள ஆய்வு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உள்ளது.
அரசு துறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் தான் திட்டப்பணிகள் விரைவாக முடிவுபெறும். ஒவ்வொரு திட்டமும் பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு நிதி மட்டுமின்றி கடன் வாங்கியும் திட்டங்களுக்காக செலவிடுகிறோம். மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஒதுக்கப்படும் நிதியை விட குறைந்த செலவில் திட்டங்களை முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டுக்கான பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும். இன்றைய ஆய்வில் சில துறைகளில் 2021 -22ம் ஆண்டு பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் கள ஆய்வில் ஈடுபட வேண்டும்.
பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஆட்சியர்கள் தடுக்க வேண்டும். பணிகளை ஆட்சியர்கள் கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும். அடுத்த மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பாகவே தற்போதுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.