5 மாதத்தில் மலர்ந்த காதல் ஐந்து மாத கர்ப்பத்தில் முடிந்தது! ஏமாற்றிய கோகுல்.. தவிக்கும் நர்மதா!
திருப்பத்தூர்: இலங்கை தமிழ் பெண்ணை ஏமாற்றி கர்பமாக்கி தப்பியோடிய இளைஞர் நான் அவன்இல்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றியது அம்பலமாகி உள்ளது. 5 மாதத்தில் மலர்ந்த காதல் 5 மாத கர்ப்பத்தில் முடிந்திருக்கிறது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் இந்திரகுமார் என்பவரின் மகள் நர்மதா (20) என்ற இளம்பெண் கோயமுத்தூர் தனியார் நூல் மில்லில் பணியாற்றிக் கொண்டே தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
அப்போது உடனிருந்த நர்மதாவின் தோழி ஒருவர் செல் நம்பரை கொடுத்து இந்த நம்பரில் எனக்கு அடிக்கடி போன் வருகிறது நீ அவனிடம் பேசு என்று கூறியுள்ளார். அந்த செல் நம்பரை நர்மதா தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு போன் செய்துள்ளார். விவரம் கேட்டு போன் செய்த நர்மதாவை காதல் வலையில் விழ வைத்துள்ளார் காதல் மன்னன் கோகுல்.
வேலை வேண்டாம்
இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டதால் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. காதலில் விழுந்த நர்மதாவை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அடிக்கடி பேசி உள்ளார் கோகுல்.. திருமண ஆசை ஏற்பட்ட நர்மதா கம்பெனியிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக அவரது பெற்றோருக்கு போன் செய்து என்னால் இந்த கம்பெனியில் இருக்க முடியவில்லை என்னை அழைத்து சென்று விடுங்கள் என்று கூறியுள்ளார். மகள் கம்பெனிக்கு சென்று ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது மகளுக்கு வேலை கடினமாக இருக்கும் என்று எண்ணி பெற்றோரும் நர்மதாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
வாய்ஸ் மெசேஜ்
வீட்டிற்கு வந்த நர்மதா இரண்டு நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு மூன்றாவது நாளில் தங்களுக்கு பலகாரங்கள் ஏதாவது வாங்கி வருகிறேன் என்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. என்ன ஏது என்று பதறிப் போன பெற்றோர்கள் அக்கம்பக்கம் தேடியுள்ளனர். இரவு 12 மணி அளவில் தான் வேறு ஒரு நபருடன் சென்று விட்டேன் என்னைத் தேட வேண்டாம் என்று குரல் பதிவை அனுப்பி வைத்துள்ளார் நர்மதா. பிறகு அந்த செல்போன் எண்ணை அந்தப் பெற்றோர்கள் தொடர்பு கொண்ட போதும் அவருக்கு எந்த விவரமும் தெரியாமல் இருந்துள்ளது.
ஏமாற்றிய கோகுல்
இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு நர்மதா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நர்மதாவின் பெற்றோர்கள் யார் எவர் என விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மீசைக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த மணிபாலன் மகன் கோகுல் (22) என்பது தெரியவந்துள்ளது. கோகுல் என்பவன் நர்மதாவை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி காதல் திருமணம் செய்து கொண்டு 5 மாதம் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு ஆசை தீர்ந்ததும் கழட்டி விட்டு ஓட்டம் பிடித்துள்ளான்.
அம்மா அழைக்கிறார்
கர்ப்பமாக இருந்த பெண் அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். நர்மதா மட்டுமின்றி பல பெண்களிடம் செல்போன் மூலம் கோகுல் காதல் லீலையில் ஈடுபட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. நர்மதாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த போது பல இளம் பெண்கள், பள்ளி சிறுமிகள் என்று பல பெண்களிடம் செல்போனில் பேசி காதல் வலையில் விழ வைத்து அவர்களிடம் காம லீலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து நர்மதா கோகுலிடம் கேட்ட போது பதில் ஏதும் சொல்லாமல் அம்மா அழைக்கிறார் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று ஓட்டம் பிடித்துள்ளார்.
கையில் குழந்தை
தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து நர்மதா உறவினர்களிடம் கூறியுள்ளார். உறவினர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கோகுலை நர்மதா உடன் வாழ வருமாறு அழைத்துள்ளனர். கொரோனா அதிகமாக பரவி வருகிறது என்னால் இப்போது வர முடியாது பிறகு வருகிறேன் என்று சாக்கு போக்கு சொல்லி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்து உள்ளது. அதனைப் பார்க்க வருமாறு அழைத்துள்ளனர். அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி தப்பித்து வந்துள்ளார் கோகுல்.
இதுவரை கைதாகவில்லை
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நர்மதா கடந்த மாதம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரிக்கிறோம் விசாரிக்கிறோம் என்று கூறிஅனுப்பி இருக்கிறார்களாம். இதற்கிடையே கோகுல், வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஏமாற்றப்பட்ட இளம்பெண் நர்மதா கைக்குழந்தையுடன் நடுத்தெருவில் நின்று தவிக்கிறார். பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மன்மத லீலையில் ஈடுபட்டு வந்த காதல் மன்னன் கோகுல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.