புதுச்சேரியில் ஜெ.விற்கு வெண்கலச் சிலை... நாராயணசாமியிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மனு- வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரி அதிமுக சட்டசபைத் தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் அம்மாநில முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து, மனு ஒன்றை அளித்தனர். அதில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு புதுச்சேரியில் வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நாராயணசாமி, செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "ஜெயலலிதாவிற்கு வெண்கல சிலை அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்து பேசி முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முன்னாள் முதல்வராக இருந்தாலும், தமிழகம் மட்டுமல்லாமல் புதுவை மாநிலத்திற்கும் தன்னால் முடிந்த உதவிகளை அவர் செய்துள்ளார். அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு எங்களுக்கு உண்டு. அதை கண்டிப்பாக நாங்கள் செய்வோம்" என்றார்.