சசிகலா தலைமையை ஏற்க மாட்டோம்.. அதிமுக தொண்டர்கள் போராட்டம்- வீடியோ
சென்னை: அதிமுக பொதுசெயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச்செயலர் பதவியை யார் வகிப்பது என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. சசிகலா தரப்பு அப்பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, மதுசூதனன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டவர்கள் போயஸ் கார்டனில் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சசிகலா அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இந்த தகவல் தீயாக பரவியது. இதை கேள்விபட்ட தொண்டர்கள் போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவியத் துவங்கினர். சசிகலா தலைமையை ஏற்கமாட்டோம் எனக் கூறி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசிகலாவுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் போயஸ் கார்டன் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.