பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதி சஸ்பெண்ட்... ஆளுநர் அதிரடி
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணி இடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.
சென்னை: ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியை பணி இடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.
பேராசிரியர் நியமனத்துக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சுரேஷ் என்பவர் கடந்த 3 தினங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் துணை வேந்தர் கணபதியை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை சுரேஷிடம் இருந்து கணபதி பணத்தை பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் கணபதி கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முற்பட்டதாக அவரது மனைவி சொர்ணலதாவும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கணபதியை வரும் பிப்ரவரி 16-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கணபதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் நியமனம் செய்த பேராசிரியர்கள், உதவி பேராசியர்களின் நியமனம் கேள்விக்குறியாகிவிட்டது.
இதைத் தொடர்ந்து ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணி இடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். மாநில ஆளுநர்கள் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாவர். அவர்கள்தான் துணை வேந்தர்களை நியமிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.