ரூ. 500, 1000 விவகாரம்.. பழைய நோட்டுகளை மாற்றி மோசடி.. 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்- வீடியோ
புதுச்சேரி: செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து வங்கிகளில் பணிபுரிபவர்கள் சிலர், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் வைத்துவிட்டு, அதற்கு இணையான மதிப்பில் ரூ. 100 நோட்டுகளை மாற்றி எடுத்துக் கொண்டதாக புகார்கள் எழுந்தன. இதேபோன்ற முறைகேடு புதுச்சேரி கூட்டுறவு வங்கிகளிலும் நடப்பதாக தணிக்கை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதுவை கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கி கிளையில் உதவி மேலாளர் குப்புசாமி, காசாளர் ரவி ஆகிய இருவரும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் இணைப்பை துண்டித்து, உள்ளே சென்று தங்களிடம் இருந்த ரூ. 3 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, வங்கியில் இருந்த ரூ. 100 நோட்டுகளை மாற்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதேபோல மாஹே கூட்டுறவு வங்கியில் மேலாளர் ஷியாமளா, கிளர்க் சந்தோஷ்குமார் என இரண்டு ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட புதுச்சேரி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.