ஒளிப்பதிவாளர் சங்கத்தில் ரூ 60 லட்சம் ஊழல்... பெப்சி சிவா மீது பிசி ஸ்ரீராம் போலீசில் புகார்- வீடியோ
சென்னை: இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் (SICA) தேர்தல், 10 மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புதிய தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சங்கத் தலைவர் பிசி ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள், பெப்சி சிவா உள்ளிட்ட சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்துள்ளனர். அந்தப் புகார் மனுவில், '2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்கவில்லை' என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிசி ஸ்ரீராம், "கனத்த இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிவர தாக்கல் செய்யாததால் இந்த முறை ஆடிட்டிங் செல்லும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. சுமார் 60 லட்சத்திற்கும் மேல் சங்கத்தில் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த புகாரினால் திரையுலக படப்பிடிப்புகள் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது சங்கத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை மட்டுமே" என்றார்.