‘சோ-வை தமிழக முதல்வராக்க முயற்சித்தார்கள்’... அந்தநாள் ஞாபகங்களை பகிரும் சிவக்குமார்- வீடியோ
சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி(82) இன்று அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் சென்று சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "சோவை தமிழகத்தின் முதல்வர் ஆக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். எனக்கு அந்தளவிற்கு பொறுமை இல்லை என்று கூறிவிட்டார். மேலும் தான் ஒரு தெர்மாமீட்டர், நோயைக் கண்டறிந்து தான் சொல்வேனே தவிர, அதற்கு சிகிச்சை தர மாட்டேன் எனத் தெரிவித்து விட்டார். எந்தப் பதவியும் வகிக்காத அவருக்கு தேசிய அளவில் அரசியல் தலைவர்களின் நட்பு இருந்தது" எனப் பாராட்டி பேசினார்.