கங்கையில் ‘சமாதி’ அடையச் சென்ற மதன்.. 6 மாதங்களுக்குப் பின் திருப்பூர் ‘அலமாரி’யில் கைது- வீடியோ
சென்னை: சென்னை வடபழனியைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் மதன் (44). இவர் சென்னை எஸ்ஆர்எம் கல்விக் குழுமத்துடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டு, மருத்துவக் கல்லூரியின் சார்பில் எம்.பி.பி.எஸ். சேர வரும் மாணவர்களிடம் பணம் பெற்று, அவர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் கங்கையில் சமாதி அடையப் போவதாக கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார் மதன். இந்த வழக்கு தொடர்பாக மதனின் கூட்டாளிகள் விஜயபாண்டியன், பெ.பார்க்கவன் பச்சமுத்து, சண்முகம், எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத் தலைவர் பச்சமுத்து என்ற பாரிவேந்தர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மாயமான மதனைக் கண்டுபிடிக்க, கூடுதலாக ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், 9 ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இவர்களது தீவிர விசாரணையில் மதன் திருப்பூரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் அலமாறி போன்ற ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதன் கைது செய்யப்பட்டார். திருப்பூரில் கைது செய்யப்பட்ட மதன் பின்னர் வேன் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.