காரைக்குடி பள்ளியில் அறிவியல் கோளரங்க கண்காட்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (13.07.2017) அறிவியல் கோளரங்கம் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியை தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்து, துவக்கி வைத்தார். இக்கண்காட்சிக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின், மாவட்ட உதவிதிட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஆ.பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சூரிய குடும்பம், கோள்கள், அவை உருவாகும் விதம், எரிகற்கள், நட்சத்திரங்கள்,அவை வெடிக்கும் விதம் ஆகியவை காண்பிக்கப்பட்டது. உயிர் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ள கோள்கள், அதைப் பற்றிய ஆராய்ச்சிகள் போன்றவை விளக்கப்பட்டது.
செயற்கைகோள்களானது சூரியன், கோள்கள், நட்சத்திரங்களைப் பற்றிய ஆய்வுகளை எவ்வாறு மேற்கொள்கிறது போன்றவை காண்பிக்கப்பட்டது.பூமி சூரியனை சுற்றி வரும் நிகழ்வு, கோள்கள் சூரியனை சுற்றும் நிகழ்வுகளை மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
எரிமலைகள், உருவாகும் விதம் , அவை வெடித்து சிதறும் காட்சிகள் போன்றவை மாணவர்களை மிகவும் கவர்ந்தது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள், தொலைவில் உள்ள கோள் குறித்தும், சனி கோளில் உள்ள வளையங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி செய்திருந்தார்.