திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பஞ்சமி தீர்த்தஉற்சவம்.. புனித நீராடிய 2 லட்சம் பக்தர்கள்- வீடியோ
திருப்பதி: திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிறிய சேஷ வாகனம், பெரிய சேஷ வாகனம், அம்ச வாகனம், முத்துப்பந்தல் வாகனம், சிம்ம வாகனம், கல்ப விருட்ச வாகனம், அனுமந்த வாகனம், பல்லக்கு வாகனம், யானை வாகனம், சர்வ பூபால வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில், கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான நேற்று சக்கர ஸ்நானம் மற்றும் பஞ்சமி தீர்த்த உற்சவம் நடந்தது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். இதன்படி சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.