பல நாட்களாக கைவரிசை... விழுப்புரத்தில் பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை மற்றும் வீடு புகுந்து நகை திருடும் பிரபல திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சகாயராஜ் , சக்திவேல் மற்றும் மைக்கல் ராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், பிள்ளையார்குப்பம், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.
முகமூடி கொள்ளை
முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்று, பெண்களை குறிவைத்து, தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
தனிப்படை
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் ,உதவி ஆய்வாளர் மாணிக்கம், தலைமை காவலர்கள் தேவேந்திரன், மணிகண்டன் உட்பட 15 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இரவு நேரங்களில் ரோந்து
இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணி நடந்து வருகிறது. இந்தநிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளையர்கள் இறையூர் பகுதியில் பதுக்கி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களை சுற்றி வளைத்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.
நகைகள் பறிமுதல்
மேலும், கொள்ளையர்களிடம் இருந்து 31 சவரம் நகை, 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.