கந்துவட்டி கொடுமை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (38). தச்சுத் தொழிலாளி, மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி விமலேஸ்வரி (30). இவர்களுக்கு ராஜஸ்ரீ (8), நித்யஸ்ரீ (5) ஆகிய இரு மகள்களும் சிவபாலா (4) என்ற மகனும் இருந்தனர்.
கடன்
மோகன் தொழிலை விரிவுப்படுத்தவும் குடும்பத்தை நிர்வகிக்கவும் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்த நபர் மோகனிடம் பணத்தை தருமாறு வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
கதவு திறக்கப்படவில்லை
ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வந்த அந்த கடன் கொடுத்த நபர், மோகனை மிகவும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் மோகன் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
5 பேர் தற்கொலை
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். யாரும் திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மோகன், விமலேஸ்வரி, 3 குழந்தைகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மருத்துவமனை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் பிரேதங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் யாரிடம் கந்து வட்டி வாங்கினர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து விமலேஸ்வரியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.