அடேங்கப்பா.. ஒத்த தொகுதியை வெல்ல.. 68 எம்.எல்.ஏ.க்கள், 10 எம்.பி.க்கள்... களமிறக்கிய திமுக...!
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக 68 எம்.எல்.ஏ.க்களை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது திமுக தலைமை.
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும், அதிமுகவை எதிர்த்து போட்டியிடுகிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் பாமகவை வைத்து அதிமுக டஃப் கொடுக்கும் என்பதால், திமுக தலைவர் ஸ்டாலின் மாவட்டச்செயலாளர் பொன்முடியுடன் ஆலோசித்து பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 100. அதில் 68 எம்.எல்.ஏ.க்களை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணிக்கு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது திமுக தலைமை. தென்மாவட்டங்களை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் ஸ்டாலின் விதி விலக்கு அளித்துள்ளார். அதுவும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரசுக்கு உறுதுணையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
விக்கிரவாண்டி தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக பொன்முடியும், செயலாளராக ஜெகத்ரட்சகன் எம்.பி.யும், நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ் பொறுப்புக்குழு உறுப்பினர்களாக மஸ்தான் எம்.எல்.ஏ, அங்கையற்கண்ணி, சேலம் செல்வகணப்தி, ஏ.கே.எஸ்.விஜயன், உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 10 எம்.பி.க்களும் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வேலூர் தொகுதிக்கு மட்டும் தனியாக நடைபெற்ற தேர்தலின் போது, எம்.பி.க்கள் யாரையும் திமுக தலைமை தேர்தல் பணியில் ஈடுபடுத்தவில்லை. அவர்களை நீங்கள் வழக்கம் போல் உங்கள் பணிகளை கவனியுங்கள் என்றார் ஸ்டாலின். இப்போது அவர்களுக்கும் அசைன்மெண்ட் தரப்பட்டுள்ளது.