அம்மாவின் ஆத்மாவுக்கு நல்ல தீர்ப்பு... மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி..!
விழுப்புரம்: முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி அதிமுக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அம்மாவின் ஆத்மாவுக்கு நல்ல தீர்ப்பு என்ற தலைப்பில் அவர் ஒட்டியுள்ள போஸ்டரில் பணம் மனிதர்களை விலைக்கு வாங்கமுடியாது என்பதை நிரூபித்த தமிழக மக்களுக்கு நன்றி என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக உளுந்தூர்பேட்டை தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்த அடிமை அதிகாரத்தை திமுக வேட்பாளர் உடைத்தெறிந்துள்ளதாக போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சிஎம் ஸ்டாலின்".. லாக்டவுன் போடுங்க..ரூ.4000 கொடுங்க".. விசிக கோரிக்கையால்.. எகிறும் எதிர்பார்ப்பு
காட்சி மாறும்
ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார்களே, அதற்கேற்ப அதிமுக ஆட்சி முடிவுற்று 4 நாட்கள் கூட ஆகாத நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும் அம்மா சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நலச் சங்க தலைவருமான ராஜா என்பவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்து போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டியுள்ளார்.
வாக்காளர்களுக்கு நன்றி
மேலும், அந்த போஸ்டரில் உளுந்தூர்பேட்டையில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் மணிகண்ணனை வாழ்த்தியும், விழுப்புரத்தில் வெற்றிபெற்ற லட்சுமணனை வாழ்த்தியும் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல் பண்ருட்டியில் வெற்றிபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை வாழ்த்தியும் அவர்கள் மூவருக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் வாசகங்கள் உள்ளன.
அதிமுக நிர்வாகி
சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் மீதுள்ள கோபத்தை இப்படி வாழ்த்து போஸ்டர் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜா. மேலும், அம்மாவின் ஆத்மாவுக்கு கிடைத்த நல்ல தீர்ப்பு தான் தேர்தல் முடிவு என்றும் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திமுக நிரந்தர ஆட்சி செய்திட வேண்டும் எனவும் அதிமுக நிர்வாகி தனது சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர்கள்
இதன் மூலம் அதிமுக தலைமை மீதும், அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் எந்தளவுக்கு கோபமாக இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஆட்சியில் இருந்த போது குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பலன் அடைந்ததன் விளைவாகவே இது போன்ற எதிர்ப்புகள் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.