ஒற்றுமையாக சந்திப்போம்.. சிவி சண்முகத்தின் ஆதரவு யாருக்கு.. அதிமுகவில் திருப்பங்கள் வருமா?
விழுப்புரம்: சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர் செல்வத்துடன் ஒற்றுமையோடு இணைந்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தேர்வு செய்யப்பட்ட 865 பயனாளிகளுக்கு 1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகைக்கான ஆணையை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், என்னுடைய ஆதரவு எப்போதுமே அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே தான். வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர் செல்வத்துடன் ஒற்றுமையோடு இணைந்து தேர்தலை சந்திப்போம்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யோகம் யாருக்கு இருக்கு - இபிஎஸ் ஒபிஎஸ் ஜாதகம் சொல்வதென்ன
ஸ்டாலின் மீது தாக்கு
தமிழக முதலமைச்சரை விவசாயி இல்லை என கூறும் ஸ்டாலின் முதலில் விவசாயியா? பச்சை கலர் துண்டு போட்டவர்கள், சேற்றை மிதித்தவர்கள் எல்லாம் விவசாயி ஆக முடியாது. விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று வரை விவசாயம் பார்த்தவர் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஊழல் கட்சி திமுக
ஆனால் திமுகவினருக்கு விவசாய நிலத்தையும், வீட்டையும் அபகரிப்பது தான் தொழில். 2 ஜி வழக்கில் கொள்ளை அடித்து உலக்கதிலேயே மிகப்பெரிய ஊழல் செய்த குடும்பம் தான் கருணாநிதியின் குடும்பம்" இவ்வாறு அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்தார்.
ஒற்றுமையே பலம்
இதனிடையே அமைச்சர் சிவி சண்முகத்தை போலவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க விரும்புகிறார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பது சர்ச்சையாக மாறினால், அது திமுகவுக்கு சாதகமாகி விடும் என்று எச்சரிக்கிறார்கள். இப்போது உள்ளபடியே தேர்தலை சந்தித்தால் தான் அது அதிமுகவுக்கு பலம் என்று விரும்புகிறார்கள்
யார் விட்டுக்கொடுப்பார்கள்
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கமும், செம்மலையும் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்றே கருத்தை வெளிப்படுத்தினர். அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை என்று அவர்கள் கூறினாலும், அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்க வேண்டும் என்பதில் தங்கள் கருத்தை கவனமாக வெளிப்படுத்தினர். அதிமுக நிர்வாகிகள் எண்ணப்படி தேர்தலை ஒற்றுமையாக சந்திப்பது என்பது ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இல் யார் விட்டுக்கொடுத்து போகப்போகிறார்கள் என்பதை பொறுத்து உள்ளது. அக்டோபர் 7ம் தேதி விடை கிடைத்துவிடும்.