நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிய முதியவர்.. வெயிலால் சுருண்டு விழுந்து பலி.. விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிய முதியவர், வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதேபோல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 224 கடைகளில், விழுப்புரம் பகுதியில் 84 கடைகள், கள்ளக்குறிச்சி பகுதியில் 70 கடைகள் உட்பட 154 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பஞ்சாலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்குவதற்காக ஏராளமான குடிகாரர்கள் குவிந்தனர். முதலில் டோக்கனை பெற்றுகொண்ட குடிகாரர்கள் மது வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த சமயத்தில் வெயில் சுட்டெரித்தது. அதையும் பொருட்படுத்தாமல் மதுவாங்கும் ஆர்வத்தில் பலர் நின்றனர். அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் கொளுத்திய வெயிலிலும் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி கொண்டு வந்தார்.
இதனிடையே அவர் சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனம் தீர்த்தகுளம் மூங்கில் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி (65) என்பதும், வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
லூஸ் ஹேர் விடாதீங்க வாழ்க்கை லாஸ் ஆகிடும் - தலைமுடியிலும் அதிர்ஷ்டம் இருக்கு