தமிழகத்தை சிங்கப்பூராக்க ஐடியா வைத்திருக்கிறேன்... அசராத அன்புமணி
விழுப்புரம்: தமிழகத்தை சிங்கப்பூர் போல் மாற்றுவதற்கு தன்னிடம் திட்டம் உள்ளதாக பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை உறுப்பினர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல திமுகவிடம் எந்த திட்டமும் கையில் இல்லை என்றும், முதல்வராக வேண்டும் என்ற கனவு மட்டும் தான் ஸ்டாலினிடம் உள்ளதாகவும் அன்புமணி விமர்சித்தார். தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் மேம்படுத்திக்காட்ட பல திட்டங்களை தாம் வைத்துள்ளதாக கூறினார்.
டெல்டா மண்டலத்தை நாசம் செய்ததே திமுக தான் என்றும், இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் விமர்சித்தார். மேலும், அதிமுக கூட்டணியில் பாமக இணைய விதிக்கப்பட்ட 10 நிபந்தனைகளில் முதல் நிபந்தனையே டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் என்றும், அதனை இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியுள்ளார் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது பாமக முதன்முதலில் முன்வைத்த கோரிக்கை என்றும், இந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்து வருவதாகவும் தெரிவித்தார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மசோதா சட்டமன்றத்தில் கொண்டுவந்த போது திமுக வெளிநடப்பு செய்தது விவசாயிகளை கோபம் கொள்ளச் செய்ததாக அன்புமணி தெரிவித்தார். பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுத்துவிட்டு இன்று வெற்று கூச்சலிடுவதாக திமுகவை சாடினார் அன்புமணி. மதுவிலக்கு உள்ளிட்ட பாமகவின் மற்ற நிபந்தனைகளையும் முதல்வர் எடப்பாடி விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
இதுக்கே பயப்படும் ரஜினி... எப்படி முதலமைச்சர் ஆவார்..? -கவுதமன் கேள்வி
குடியுரிமை சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பாக இஸ்லாமியர்களிடமு, பொதுமக்களிடமும் திமுக தவறான கருத்துக்களை பரப்பி போராட்டங்களை தூண்டிவிடுவதாகவும், குடியுரிமை சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் இஸ்லாமியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். திமுகவும், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சி ஏ ஏ-வை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அன்புமணி தெரிவித்தார்.