பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... அன்புமணி உறுதி
விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் எனவும் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார்.
இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிப்பதா? மு.க. ஸ்டாலின் கண்டனம்
50 லட்சம் பேர்
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல திட்டங்களை செயல்படுத்தி மேம்படுத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. உறுதியளித்துள்ளார். மருத்துவச் சேவையை இலவசமாக அளிக்க தங்களிடம் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பணை
தமிழகம் முழுவதும் உள்ள 223 ஆறுகளில் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும் என்றும், நீர் மேலாண்மை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்படும் என அவர் கூறினார்.
அன்புமணி பேச்சு
பாமக கூட்டத்தில் அன்புமணி இவ்வாறு பேசியது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துக்கொண்டே பாமக ஆட்சிக்கு வருவதை பற்றி அன்புமணி பேசியது ஆளுந்தரப்பை மிரட்சியடையச் செய்துள்ளது.
வேறு வேறு
அன்புமணியின் பேச்சு தொடர்பாக பாமக முன்னணி நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய போது, கூட்டணியில் இருப்பதற்காக எங்க கட்சியை நாங்க அப்படியே விட்டுவிடவா முடியும், எங்க கட்சி நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி பேசியிருக்கிறார், அதிலென்ன தவறு இருக்கிறது. மிகச்சரியாக பேசியிருக்கிறார். பாமக ஆட்சிக்கு வந்தால் அன்புமணி தந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார்.