விழுப்புரத்தில் கிமு 3-ம் நூற்றாண்டு தமிழர்களின் முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள் கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கிமு 3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், மண்குடுவைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை லோக்சபா எம்.பி. ரவிக்குமார் நேரில் பார்வையிட்டார்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை கொடுக்கூர் என்ற கிராமத்தில் செங்கல் சூளைக்காக பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பழமையான முதுமக்கள் தாழிகள், மருந்துக் குடுவைகள், எலும்புகள், பானை ஓடுகள், கீழடியில் கிடைக்கப்பெற்ற பெரிய செங்கற்கள் போன்றவை கிடைத்துள்ளன.
வேண்டாம் இனி ஹிரோஷிமா, நாகசாகி.. அமெரிக்க வன்மம்.. 75 ஆண்டுகள் கரைந்தது.. ஜப்பானின் சோகம்!
தொல்லியல் துறை ஆய்வு
பழமையான பொருட்கள் கிடைத்ததை அடுத்து இப்பகுதி மக்கள் தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் தலைமையிலான குழு விரைந்து வந்து கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் கைப்பற்றி தொல்லியல் துறை வசமாக்கியது.
ரவிக்குமார் ஆய்வு
மேலும் விழுப்புரம் எம் பி ரவிக்குமாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தொல்லியல் பொருட்களை எம் பி ரவிக்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக ரவிக்குமார் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.
கீழடி போல செங்கற்கள்
அப்போது ரவிக்குமார் கூறியதாவது: கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்க கூடும். கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அகழாய்வு நடவடிக்கை தேவை
இதனால் இப்பகுதியிலும் அகழாய்வு நடத்த வேண்டும். இந்த தொல்லியல் பொருட்கள் தொடர்பாக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார் என்றார் ரவிக்குமார். விழுப்புரம் பகுதியில் மேட்டுப்பாளையம், பூவரசன்குப்பம் பகுதிகளிலும் இதேபோல் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.