அரசியலில் சத்திரியனல்ல… சாணக்கியனா இருக்கிறதுதான் ரொம்ப முக்கியம்.. அன்புமணியின் நச் பேச்சு
Recommended Video
விழுப்புரம்:சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது தான் முக்கியம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்கூழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அன்புமணி பேசியதாவது:
லோக்சபா தேர்தலில் பாமகவின் கூட்டணி முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். கட்சியின் வயதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து பாமக உள்ளது. நம் கட்சியின் நோக்கம் தமிழகம் முன்னேற வேண்டும் என்பதே ஆகும்.
புகையிலை எதிர்ப்பு
ஆட்சிக்கு வந்தால் தான் அந்த இலக்கை நம்மால் எட்டி பிடிக்க முடியும். புகையிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தோம். ஆனால், பதவிக்கு வந்தவுடன் பொது இடங்களில் புகை பிடிக்ககூடாது என்று ஆணையிட்டோம்.
2011ல் தனித்து போட்டி
தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வருவது உறுதி. ஏனென்றால்... அது காலத்தின் கட்டாயம். 2011-ம் ஆண்டு தனித்து போட்டி என்பதை தைரியமாக செயல்படுத்தினோம். அந்த தைரியம் தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை.
முழு மதுவிலக்கு
பூரண மதுவிலக்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம். இதனை ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். தனித்து போட்டி என்று அறிவித்து கடந்த காலங்களில் போட்டியிட்டோம்.
10 சதவீதம் வாக்குகள்
மக்கள் நமக்கு அளித்தது 6 சதவீத வாக்குகள் தான். நம் இலக்குகளை அடைய சூழலுக்கேற்ப வியூகங்களை அமைக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் ராமதாஸ் இந்த முடிவு எடுத்துள்ளார்.
ஆசிர்வாதம் பெற்றனர்
ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களை பெறுவோம். தைலாபுரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் ராமதாஸிடம் ஆசி பெற்றார்கள்.
10 அம்ச கோரிக்கைகள்
இது நமக்கு கிடைத்த மரியாதை. பாமக எந்த கொள்கையையும் விட்டு கொடுக்காமல் 10 அம்ச கோரிக்கைகளுடன் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
சாணக்கியன்
அதிமுகவுடன் இணைந்து இக்கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தால் எளிதில் நம் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும். சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருப்பது தான் நமக்கு முக்கியம்.
பாமகவின் கொள்கை
89 எம்எல்ஏக்களை கொண்டுள்ள திமுகவால் செய்யமுடியாததை ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாமகவால் செய்யமுடியும். இந்த கூட்டணி அமைக்கப்பட்டதால் பாமக தமது கொள்கையிலிருந்து எள் முனையளவும் பின்வாங்கவில்லை என்று அன்புமணி பேசினார்.