இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா.. தெரியாதா? பாஜக குறித்து திருமாவளவன் பகீர் புகார்
விழுப்புரம்: அதிமுகவை காவு கொடுக்கும் வேலையில் பாஜக ஈடுபடுவதாகவும் இது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா, தெரியாதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வெளியிடப்பட்டது.
இந்த சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. அதிமுக கூட்டணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக கூட்டணியில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் முதல்வர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தாமரை சேற்றில் மட்டும்தான் வளர்கிறது. அதிமுகவை காவு கொடுக்கும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்!
அதிமுகவை அழித்து அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வந்து பாஜக - திமுக என இருதுருவ அரசியலை செய்ய முயற்சி நடக்கிறது .இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமோ தெரியாதோ? எனக்கு தெரியவில்லை. தற்போதைய அரசை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்கிற நிலையில் மட்டும் தான் அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். பாஜகவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதன் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு அதிமுக மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறது" என்றார்.