கர்ப்பமானதால் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. காதலன் கைது
விழுப்புரம்: பொம்மையார்பாளையம் அருகே முந்திரி தோப்பில் இளம் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் முந்திரி தோப்பில் கடந்த 30-ஆம் தேதிஅரைகுறையாக எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. எரித்துக்கொல்லப்பட்ட பெண் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பெண்ணின் முகம் முழுவதும் எரிந்த நிலையில் இருந்ததால் அவர் யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அக்காவை காணோம்
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் தனது பெயர் அப்பாதுரை என்றும் தனது அக்காள் லட்சுமியை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்றும் கூறினார்.
அக்காவாக இருக்குமோ?
மேலும் முந்திரிக்காடு அருகே ஒரு பெண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது பற்றி தெரியவந்ததால் அது தன்னுடைய அக்காளாக இருக்குமோ? என்று சந்தேகத்தில் விசாரிக்க வந்து இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
கதறிய தாய்
இதைத்தொடர்ந்து அப்பாதுரை, அவருடைய தாயார் மனோ ரஞ்சிதம் மற்றும் 2 சகோதரிகளை பிம்ஸ் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பெண்ணின் உடலை பார்த்த தாயார் மனோரஞ்சிதம் அது தனது மகள் லட்சுமிதான் என்று கூறி கதறினார்.
கடையில் வேலை
கணவர் இறந்து விட்ட நிலையில் மனோரஞ்சிதம் தனது 3 மகள்கள், 3 மகன்களுடன் கூனிமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவர்களில் ஒருவரான லட்சுமி என்ற மகள் புதுச்சேரியில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
டிரைவருடன் காதல்
அப்போது புதுச்சேரி கென்னடி நகரை சேர்ந்த மினிவேன் டிரைவர் அருண்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் தான் கடந்த 29ஆம் தேதி வேலைக்கு சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை.
திடுக்கிடும் தகவல்
இந்நிலையில் லட்சுமியின் காதலனை பிடித்து விசாரித்தது போலீஸ். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. காதலன் அருண்குமார் போலீசாரிடம் தெரிவித்ததாவது, 29ஆம் தேதி வேலை முடித்து சென்ற லட்சுமியை பேச வேண்டும் எனக்கூறி நண்பர் அப்துல் ரஹீமுடன் சந்தித்தேன்.
காதலி கர்ப்பம்
அப்போது லட்சுமி, நாம் இருவரும் பழகியதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், எனவே உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினார். அதற்கு கடந்த சில நாட்களாக நான் உன்னை சந்திக்கவே இல்லை, எனவே கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை என்று கூறினேன்.
அடித்த காதலன்
ஆனால் லட்சுமி கர்ப்பத்துக்கு நான்தான் காரணம் என கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இதனால் எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் லட்சுமியை ஓங்கி அடித்தேன். அதில் லட்சுமி மயக்கமடைந்து விழுந்தார்.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இதைப்பார்த்த நான் நண்பர் அப்துல் ரகீமும் மோட்டார் சைக்கிளின் நடுவில் லட்சுமியை தூக்கி வைத்துக் கொண்டு பொம்மையார் பாளையம் - குயிலாப்பாளையம் ரோட்டில் உள்ள முந்திரிக்காட்டு பகுதிக்கு சென்றோம். அங்கு லட்சுமியை முந்திரிக்காட்டு ஓரமாக போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் இருந்த பெட் ரோலை பிடித்து அவரது உடலில் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டேன். இவ்வாறு அருண்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பெரும் அதிர்ச்சி
இதையடுத்து அருண்குமாரையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். திருமணத்திற்கு வற்புறுத்திய கர்ப்பமான காதலியை காதலனே பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.