விரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின்... எடப்பாடி பழனிசாமி பேச்சு
விழுப்புரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், மகளிர் சுய உதவிக் குழுவை தொடங்கி வைத்ததே ஜெயலலிதா என்றும், ஏதோ தாம் தான் சுய உதவிக் குழுவை தொடங்கியது போல் செல்லும் இடமெல்லாம் ஸ்டாலின் பொய் பேசி வருவதாகவும் சாடினார்.
மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசி வருவதாகவும், அதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திமுகவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி பதவிக்கு வர முடியும் என்றும், ஆனால் அதிமுகவில் அப்படியில்லை கடைகோடி தொண்டன் கூட உயர் பதவியை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
விவசாயி கூட முதலமைச்சராகலாம் என்ற நிலையை உருவாக்கி தந்திருப்பது அதிமுக தான் எனக் கூறினார். மேலும், உதயநிதிக்கு என்ன அரசியல் தெரியும் என அவரெல்லாம் பிரச்சாரம் செய்கிறார் என கிண்டல் அடித்ததுடன், அரசியலில் சீனியரான பொன்முடிக்கு உதயநிதி பேசுவதை எல்லாம் நின்று கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமி பொன்முடியை பற்றி பேசியபோது, அதை ஆமோதிப்பது போல் தலையசைத்த அமைச்சர் சி.வி.சண்முகம் அதனை வரவேற்றார். மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறுவது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.