விழுப்புரத்தில் இ-பாஸ் வழங்குவதில் சர்ச்சை.. கடுப்பான பொன்முடி.. அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி
விழுப்புரம்: விழுப்புரத்தில் தனது தொகுதியை சேர்ந்த நபருக்கு துக்க நிகழ்வுக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நேரடியாக சென்று, அங்கிருந்த அதிகாரிகளை சராமாரியாக சாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மருத்துவ காரணங்கள், துக்க நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட மிக அவசரமாக வெளியே செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற முடியும்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் துக்க நிகழ்வுக்கு செல்ல இ-பாஸ் வழங்காததை கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை கடுமையாக சாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மத்திய மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மணம்பூண்டி ஒன்றியம், கோட்டமருதூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவியின் தந்தை வெங்கடேசன் என்பவர் கர்நாடகாவில் உள்ள சிமோகா என்ற இடத்தில் உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த அருண் மற்றும் அருணின் மனைவிக்கு அனுமதி சீட்டு கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து 16 மணி நேரத்திற்கு மேலாகியும், அனுமதிச் சீட்டு வழங்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த அருண் தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான பொன்முடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்துள்ளார்.
உடனே பொன்முடி மாவட்ட ஆட்சியர் அண்ணாதுறையை தொடர்பு கொண்டு அருணுக்கு இ-பாஸ் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போதும் அருணுக்கு ஈ-பாஸ் வழங்கப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து பொன்முடி உடனடியாக அருணை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணியிலிருந்த கூடுதல் பெண் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களிடம், அருணுக்கு இ-பாஸ் வழங்காதது குறித்து சராமாரியாக கேள்விகளை எழுப்பி சாடினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவுபடி உடனடியாக அருணுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. சுமார் 29 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இ-பாஸ் கிடத்ததை தொடர்ந்து, அருண் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி நன்றி சொல்லிவிட்டு, கண்கலங்கியபடி தனது மாமனாரின் இறுதி சடங்கிற்கு புறப்பட்டு சென்றார்.