விழுப்புரத்தில் கொரோனா எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. கோயம்பேடு சந்தையில் தொடர்புடைய 20 பேருக்கு கொரோனா
விழுப்புரம்: கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
சென்னை கோயம்பேடு சந்தையில் வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவலர்கள் என 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் மட்டும் 52 பேருக்கும், கோயம்பேட்டிலிருந்து ஊர் திரும்பிய அரியலூர் மாவட்டத்தில் 22 பேர், கடலூரில் 17 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், விழுப்புரத்தில் 20 பேர் மற்றும் பெரம்பலூரில் ஒருவர் என மொத்தம் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலருக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே விழுப்புரத்தில் 11 கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
விழுப்புரம் மாவட்டத்தில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 27 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற 24 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
வியாபாரம்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக இருந்தாலும் 24 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதால் சிவப்பு மண்டலத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரம், கூலி வேலை செய்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம்
இதனால் கோயம்பேடு சந்தையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 250 பேர் அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். அவர்களை காவல்துறை உதவியுடன் சுகாதாரத்துறையினர் கண்டறிந்து திண்டிவனத்தில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி, விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர், அரசூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகள் என மொத்தம் 4 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதுதவிர பல்வேறு வெளிமாவட்டங்களை சேர்ந்த 100 பேர் விழுப்புரம் மாவட்டத்தின் வழியாக தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மேற்கண்ட 4 மையங்களிலும் தனிமைப்படுத்தினர்.
17 பேருக்கு கொரோனா
இந்த 4 கல்லூரி மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட 350 பேரிடமும் மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிவில் கோயம்பேட்டில் இருந்து திரும்பிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
11 கிராமங்கள்
இதனால் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன். மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து வருபவர்களை கண்டறியும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
600 தொழிலாளர்கள்
இதனிடையே கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.