காலையிலேயே சொல்லிட்டேனே.. இன்னிக்கு வந்து விடும்.. சொன்னபடி வந்த உதவிகள்.. விழுப்புரம் எம்பி ஹேப்பி!
விழுப்புரம்: "காலையிலேயே சொல்லிட்டேனே.. இன்னைக்கு நிவாரணம் வந்துவிடும்" என்று கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள் என்னிடம் தெரிவித்தனர்.. தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் முகாம்களில் உள்ள ஈழ தமிழர்களுக்கு கிடைக்க மாவட்ட கலெக்டர்கள் இப்படி சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தது அவர்களுக்கு பேருஉதவியாக இருக்கும் என்று திமுக எம்பி ரவிக்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் ஈழத் தமிழர் பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி வருபவர்.. பார்லிமென்ட்டில் ''கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா?'' என்று கேள்வி எழுப்பியபோதே அனைவரின் கவனத்தையும் திருப்பியவர்.
தற்போது கொரோனா விவகாரம் தொற்று தலைதூக்கி உள்ளதால் அது குறித்த ஒவ்வொரு எம்பியும் தங்கள் தொகுதியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், விழுப்புரம் தொகுதியிலும் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல்களை "கொரோனா அப்டேட்" என்ற பெயரில் ரவிக்குமார் எம்பி தினமும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக அரசு அனைத்து தரப்பினருக்கும் தற்போது நிவாரண உதவிகள் அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் அகதி முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை என கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி ஆகிய முகாம்களிலிருந்து முறையீடுகள் ரவிக்குமாருக்கு வந்துள்ளன. இது குறித்து இரு மாவட்ட கலெக்டர்களிடம் ரவிக்குமார் பேச, அதன்படியே மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கையும் உடனடி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து எம்பி ரவிக்குமாரிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி ஆகிய முகாம்களிலிருந்து அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.. உடனே கடலூர் மாவட்ட கலெக்டரிடம் பேசினேன்... அவர்களுக்கு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் அகதி முகாம்களில் 433 குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர் என்றும் என்னிடம் சொன்னார்.
அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடமும் போனில் தொடர்புகொண்டு சின்னசேலம் முகாமுக்கு நிவாரணம் வழங்குமாறு கேட்டேன்.. அதற்கு 'காலையிலேயே சொல்லிட்டேனே.. இன்னைக்கே நிவாரணம் வழங்கப்பட்டுவிடும்' என்றார்.. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் முகாம் மட்டும்தான் உள்ளது.. அதில் இருப்பவர்களுக்கு பணம் விநியோகம் செய்தாகி விட்டது. ரேஷன் பொருட்கள் 43 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதே வேண்டுகோளை விழுப்புரம் கலெக்டருக்கும் அனுப்பினேன்.. அவரும் இன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்று உறுதி அளித்தார். இப்படி ஈழ தமிழர்களின் முறையீடு குறித்து என்னுடைய கோரிக்கைக்கு கலெக்டர்கள் செவிசாய்த்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.. இதனால் ஏராளமான ஈழ தமிழர்கள் பயனடைவார்கள்.. அதேபோல, இந்த பேரிடர் காலத்தில் ஈழத் தமிழ் அகதிகளை பாதுகாப்பதில் தமிழக அரசு மட்டுமின்றி நாமும் கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்" என்று வேண்டுகோளையும் முன்வைத்தார்.