மதுரையில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பிரசவத்தின் போது மரணம் - விழுப்புரத்தில் நால்வர் பலி
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் நோய் தொற்று தினசரியும் அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் இன்று மேலும் 4 பேர் மரணமடைந்துள்ளனர். மதுரையில் இன்று 2 பேர் மரணமடைந்துள்ளனர்.
விழுப்புரம்: கொரோனோ நோய் தொற்றுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து விழுப்புரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது பல மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்தார். இதேபோல வானூர் அடுத்த தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மரணமடைந்தார். இதே போல அரியலூர் திருக்கை சேர்ந்த அண்மையில் உயிரிழந்த இளைஞரின் தாயார், கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இன்று கொரோனா பாதிப்பில் உயிரிழந்தனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகும் என தெரிகிறது. மாவட்டத்தில் இதுவரை 551 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா
மதுரையில் 2 பேர் மரணம்
மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 45வயது நிரம்பிய கர்ப்பிணி பெண் பேறுகாலத்தின் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளையும் ஆரோக்கியத்துடன் மருத்துவர்கள் மீட்டனர். மதுரையில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளது மதுரை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது.