கொரோனா பாதித்த வடமாநில வாலிபர் தலைமறைவு.. விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட, வடமாநில வாலிபர் தலைமறைவான சம்பவம் பொதுமக்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
விழுப்புரம் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 வயதுடைய தலைமை ஆசிரியர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளதால், நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும் வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள் 1,959 போ் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இதில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 47 போ் உள் நோயாளிகளாக, விழுப்புரம் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேருக்கு உறுதி
இந்நிலையில் விழுப்புரம் பைபாஸ் சாலையில் உள்ள சுகாதாரத்துறை மனிதவள மேம்பாட்டு கல்வி நிறுவன வளாகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 26 பேர் நேற்று திடீரென விடுவிக்கக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சோதனையில் முடிவுகளில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நான்கு பேரில், மூன்று பேரை போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து, கொரோனா வார்டில் அனுமதித்துள்ளனர். மீதமுள்ள ஒருவர் மட்டும் தலைமறைவாகிவிட்டார்.
30 வயது வாலிபர் தலைமறைவு
தலைமறைவான நபர் டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய வாலிபர். இவர் சமையற்கலை படிப்பை முடித்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேர்முகத்தேர்வில் பங்கேற்றுள்ளார். அப்போது சாலை விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த மாதம் 16 ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பின் புதுச்சேரியில் ஓரிரு நாட்கள் சுற்றித்திருந்துள்ளார்.
உடல் நலம் பாதிப்பு
பின்னர் 21 ஆம் தேதி அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம் பகுதிக்கு சென்ற அவர், வடமாநில லாரி ஓட்டுநர்கள் சிலருடன் ஒரு வார காலம் தங்கியுள்ளார். இதனிடையே திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், அவரை விழுப்புரம் பைபாஸ் சாலையில் உள்ள சுகாதாரத்துறை மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள சிறப்பு வார்டில் 28 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
2வது சோதனையில் பாசிட்டிவ்
முதல்முறை அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்திருக்கிறது. இதனிடையே நேற்றுடன் கண்காணிப்பு காலம் 28 நாட்கள் முடிந்ததும், இவருடன் சேர்த்து மொத்தம் 26 பேர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வந்த இரண்டாவது பரிசோதனை முடிவில், இவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸார் தேடுகின்றனர்
இதனால் அவரை விழுப்புரம் முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் அவர் அளித்திருந்த தொலைபேசி எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் விழுப்புரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் தலைமறைவான சம்பவத்தால் விழுப்புரம் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனிடையே பரிசோதனை முடிவுகள் முழுமையாக வெளி வருவதற்கு முன்பே 26 பேரும் எப்படி விடுவிக்கப்பட்டார்கள்? இதற்கு யார் பொறுப்பேற்பது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
மாற்றி அனுப்பிட்டாங்களாம்
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறையிடம் கேட்டபோது, கொரோனா தொற்று நெகட்டிவ் வந்த நோயாளிகளை கண்காணிப்பில் இருந்து விடுவிப்பதற்கு பதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை மாற்றி விடுவித்துவிட்டாகவும், இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.