உள்ளாடையுடன் பேசினார்.. பெண் கொடுத்த புகார்.. அடித்தே கொல்லப்பட்ட இளைஞர்.. தலித் என்பதால் கொலையா?
தலித் இளைஞரை அடித்து கொன்றுள்ளனர்
விழுப்புரம்: டிரஸ்ஸை எல்லாம் கழட்டிவிட்டு.. உள்ளாடையுடன் தன்னிடம் நெருங்கி தவறாக பேசினார் என்று பெண் ஒருவர் தலித் இளைஞர் மீது குற்றம் சாட்டவும்.. அவரை பொதுமக்கள் அடித்தே கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள கிராமம் காரை... இங்கு வசித்து வந்த இளைஞர் சக்திவேல்.. 24 வயது இளைஞர். விழுப்புரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தவர்.. இவரது வீட்டிற்கும், பெட்ரோல் பங்கிற்கும் ரொம்ப தொலைவு.. அதனால் தினமும் பைக்கில்தான் சென்று வருவார்..
இவர் கடந்த 12-ஆம் தேதி விழுப்புரத்திற்கு வேலைக்கு சென்றிருக்கிறார். வீட்டிலிருந்து ஆதார் அட்டை, போட்டோ எடுத்துக்கொண்டு ஆபிஸ் வருமாறு ஆபீசில் இருந்து சொல்லவும், அதற்காக மதியம் வீட்டுக்கு கிளம்பி சென்றுள்ளார்.
உருட்டி வந்தார்
மதியம் 1.30 மணி இருக்கும்.. வீட்டுக்கு போய் ஆதார், போட்டோ எடுத்துகொண்டு, திரும்பவும் வந்து கொண்டிருந்தபோது, பைக்கில் பெட்ரோல் இல்லை.. பாதிவழியிலேயே நின்று விட்டது.. அதனால் 2 கிமீ தூரத்துக்கு பைக்கை உருட்டியே சென்றுள்ளார். சே.புதூர் கிராமத்தின் மலைப்பகுதிக்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது, அந்த நேரத்தில் வயிறு ஒருமாதிரியாக இருக்கவும், அங்கு இயற்கை உபாதையை கழித்துள்ளார். அது ஒரு விவசாய பகுதி என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சக்திவேல் நினைத்துள்ளார்.
உள்ளாடை
ஆனால், பக்கத்திலேயே நிலத்தில் கவுரி என்ற பெண் களை எடுத்துக்கொண்டிருந்து இருக்கிறார்.. சக்திவேல் அங்கு நிற்பதை பார்த்து தவறாக புரிந்துகொண்டு, சத்தம் போட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்... வயலில் வேலை செய்துகொண்டிருந்த தன்னிடம், டிரஸ்ஸை கழட்டிவிட்டு, உள்ளாடையுடன் சக்திவேலு தவறாக பேசியதாக கவுரி புகார் சொன்னார்.
சரமாரி தாக்குதல்
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சக்திவேலை பிடித்து கை, கால்களை கட்டி சரமாரியாக தாக்க தொடங்கினர். என்ன ஏதென்றும் விசாரிக்காமல், கவுரி போட்ட கூச்சலை மட்டுமே நம்பி இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில், கவுரியின் கணவர் உட்பட உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து சக்திவேலை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
7 பேர் கைது
தகவலறிந்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்துதான் பெரியதச்சூர் போலீசாரும் விரைந்து வந்துள்ளனர்.. அப்போது படுகாயங்களுடன் கிடந்த சக்திவேலை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்காமல் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. வீட்டுக்கு போனதுமே சக்திவேல் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரியதச்சூர் போலீசார், கவுரி அவரது கணவர் ராஜாவை கைது செய்தனர். மேலும் சக்திவேலுவை தாக்கிய 5 பேரையும் கைது செய்தனர்.
திருமாவளவன்
இவர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. உயிரிழந்த சக்திவேல் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.. அடித்தே கொன்ற கொடூரத்தினால் செஞ்சி பகுதி மக்கள் கடும் கொந்தளிப்புக்கு உள்ளனார்கள்.. சக்திவேல் உயிரிழந்த தகவலை கேட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரிலேயே வந்துவிட்டார்... சக்திவேலுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.. அவரது குடும்பத்திற்கும் ஆறுதல் சொன்னார்.
சாதி உணர்வு
"சக்திவேலின் மீது தாக்குதல் நடத்திய எல்லோரையுமே கைது செய்ய வேண்டும்.. சக்திவேலில் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தர சென்ற சக்திவேலின் அப்பாவும் தாக்கப்பட்டுள்ளார். சாதி உணர்வோடு செயல்பட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காட்டமாக கேட்டுக் கொண்டார்.
நெஞ்சுவலி
அந்த சமயத்தில், சக்திவேல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள், அதனை வீடியோவாகவும் எடுத்து பரவ விட்டுள்ளனர். இது தான் மேலும் பரபரப்பை தந்துவிட்டது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை கவுரி தரப்பில் ஒன்று சொல்கிறார்கள்.. சக்திவேல் நெஞ்சுவலியால்தான் இறந்தார் என்று மற்றொரு தரப்பில் சொல்கிறார்கள்.. ஆனால் அடித்தே கொன்றுவிட்டார்கள் என்று இன்னொரு தரப்பு சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. இதை போலீசார்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
எனினும், எதையுமே சரியாக விசாரிக்காமல் பொதுமக்களாகவே சட்டத்தை கையில் எடுத்துகொண்டு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றி.. ஒரு உயிரையே கொன்றுவிட்டார்கள் என்பதே பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.. இது ஒருக்காலும் ஏற்க முடியாததே!