வண்டி வண்டியாக கொண்டு வந்து பணத்தை கொட்டுகின்றனர்.. விக்கிரவாண்டியில் கொந்தளித்த கெளதமன்
விழுப்புரம்: "முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர், அவரது மகன்.. இவங்க வண்டிகளில் பணம் கொண்டு வந்து விக்கிரவாண்டியில் இறக்குமதியாகிறது.. 75 கோடி பணம் இறங்கி இருக்கு.. தலா 2000 மக்களுக்கு வினியோகம் பண்றாங்க" என்று அதிமுக, திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து கௌதமன் நடுரோட்டில் மறியலில் உட்கார்ந்துவிட்டார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில், அந்தக் கட்சியின் பொதுச் செயலரான திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்திலும் சில தினங்களாக ஈடுபட்டு வருகிறார்.
ஐம்பது ஆண்டுகால நந்தன் கால்வாய் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் திராவிடக் கட்சிகளின் அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்து வருவதாக, குற்றஞ்சாட்டும் கௌதமன், இந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றால், நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து விவசாயத்தை மேம்படுத்துவேன் என்ற வாக்குறுதியையும் தொகுதி மக்களிடம் தந்து வருகிறார்.
இந்நிலையில், விக்கிரவாண்டியில் அதிமுகவினரும், திமுகவினரும் வாக்குக்கு பணம் வினியோகம் செய்வதாக கூறி நடுரோட்டில் மறியலில் உட்கார்ந்து விட்டார் கௌதமன். விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கௌதமனின் இந்த போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தந்தனர். இதனால் போலீசார் விரைந்து வந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமன்:
"முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இவர்களின் வாகனங்களில் பணம் கொண்டு வரப்படுகிறது. இந்த இரண்டு கட்சியை சேர்ந்த நபர்களும் ,75 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை விக்கிரவாண்டி பகுதியில் இறக்குமதி செய்து இருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு தலா 2000 வீதம் பணம் வினியோகம் செய்து வருகிறார்கள்" என்றார்.
இதையடுத்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் நேரில் சென்று பணம் வினியோகம் செய்யும் இரு கட்சிகள் மீதும் ஜனநாயக முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனு அளித்தார் கௌதமன்.