திமுக பிரமுகர் ஓடஓட விரட்டிக் கொலை.... விழுப்புரத்தில் மர்ம கும்பல் வெறிச்செயல்!
விழுப்புரம் : விழுப்புரத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திமுக பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை திமுக பிரமுகர் ஜெயக்குமார் டீ குடிப்பதற்காக தனது இருச்சக்கர வாகனத்தில் இரும்பைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரும்பை சிவன் கோயில் அருகே, திமுக பிரமுகர் ஜெயக்குமாரை திடீரென வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அவர்களிடம் இருந்து ஜெயக்குமார் தப்பித்து ஓடிய போதும், அவரை விடாமல் ஓட, ஓட துரத்தி சென்று மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது. இதில் உடல் முழுவதும் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு ஜெயக்குமாரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி மர்ம கும்பலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திமுக பிரமுகர் ஜெயக்குமார் படுகொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலிசார் கூறியபோது, கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்றில் ஜெயக்குமாரின் தம்பி மகன் தமிழ்வேந்தன் என்பவர் சம்பந்தப்பட்டிருந்துள்ளார். அவரை, ஜெயக்குமார் தான் ஜாமீன் எடுத்ததாக தெரிகிறது. அந்த விரோதத்தின் அடிப்படையில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வானூர் பி.டி.ஓ அலுவலகம் அருகே உள்ள டீ கடையில் இந்த நபர் தினமும் காலையில் டீ குடிப்பதற்கு வருவார். அதை தெரிந்து கொண்டு, இன்று வழிமறித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திமுக பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.