விக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
விழுப்புரம்: விக்ரவாண்டியில் விட்டதை விரைவில் பிடித்துக்காட்டுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்றும் அதனை சந்திக்க திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் அதிமுக அரசு நடத்திய நாடகத்திற்கான பரிசை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளித்துவிட்டதாக ஸ்டாலின் விமர்சித்தார்.
கருணாநிதி சிலை
விழுப்புரம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய ஸ்டாலின், தமிழக அரசை பற்றியும், மத்திய அரசை பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், அமைச்சர்கள் பற்றியும், உள்ளாட்சித்தேர்தலில் சில அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு துணை போனதாகவும் கூறி விளாசினார்.
உறுதியாக
தமிழக சட்டமன்றத் தேர்தலை விரைவில் சந்திப்போம் என கட்சியினர் மத்தியில் உரையாற்றிய ஸ்டாலின், அதற்கு தயார் நிலையில் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், உறுதியாக அடுத்தது திமுக ஆட்சி தான் என்றும் அதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
முழுவெற்றி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த முழு வெற்றியை முறைகேடுகள் மூலம் ஆளுங்கட்சி தட்டிப்பறித்துள்ளதாகவும், சில அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு துணை போகாமல் இருந்திருந்தால் திமுக இன்னும் பெரியளவில் வெற்றியை ஈட்டியிருக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
பாராட்டு
கருணாநிதி சிலையை தத்ரூபமாக வடிவமைத்த சிற்பி சிவராஜனுக்கு மோதிரம் அணிவித்து பாராட்டிய ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதி சிலையை நிறுவ வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் கூறினார். குற்றச்செயல்களில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருந்தால் அதில் நியாயம் கிடைக்காத நிலை உள்ளதாகவும், விரைவில் காட்சிகள் மாறும் எனவும் ஸ்டாலின் உறுதியளித்தார்.