நான் தொப்பி அணியாத முஸ்லிம்.. உங்களில் ஒருவன்.. சிறுபான்மை என்று சொல்லி கொள்ளாதீர்.. ராமதாஸ் நச்!
திண்டிவனம்: "நான் தொப்பி அணியாத முஸ்லிம். உங்களில் ஒருவன்.. சிறுபான்மை என்று சொல்லிக்கொள்ளாதீர்கள்.. அப்படி ஒரு பாகுபாடு இங்கு கிடையாது.. எல்லா உரிமைகளோடும் நாம் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இஸ்லாமிய பிரதிநிதிகளிடம் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
பாமகவை பொறுத்தவரை குடியுரிமை திருத்த சட்டத்தை முழு மனதோடு ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக் கொள்ளவில்லை.. ஆனால் ராஜ்யசபாவில் சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தனர்.
இது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் சொல்லும்போது, "கூட்டணி தர்மத்தை மதித்து ஆக வேண்டும். அதேசமயம், பாமகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. நாங்கள் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவளித்தது ஈழத்தமிழர்களுக்கு எதிரான வாக்கு இல்லை" என்றார்.
பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதா? எல்.ஐ.சி பங்குகள் விற்பனைக்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு
சட்ட மசோதா
டாக்டர் இப்படி சொன்னதுமே பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.. கூட்டணியில் இருந்தால் ஆதரிக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.. ஆனால் இதனை அடுத்த சில தினங்களிலேயே அன்புமணி ராமதாஸ் தெளிவுபடுத்தினார்.. "குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கையும் சேர்க்க வேண்டும். இலங்கையில் 30 வருஷமாக தமிழர்களுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது உள்ள பிரதமர், ஜனாதிபதி எல்லோரும் போர்க்குற்றவாளிகள்... பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது... இதனுடன் இலங்கையையும் சேர்க்கவேண்டும். ஏற்கனவே அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார்.
கல்தா
இதனிடையேதான் சென்னையில் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக பேரணி நடத்தியது.. இந்த பேரணியிலும் பாமக கலந்து கொள்ளாமல் கல்தா கொடுத்தது.. காரணம் பாஜகவை ஆதரிக்கப் போய் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி வரும் என்று பாமக நன்றாக உணர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல.. இஸ்லாமியர்களுக்கு என்றுமே நாங்கள் ஆதரவானவர்கள் என்பதை மீண்டும் டாக்டர் ராமதாஸ் நிரூபித்துள்ளார்.
ஜவாஹிருல்லா
தைலாபுரம் தோட்டத்திற்கு முஸ்லிம் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சில பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, குனங்குடி ஹனீபா உள்ளிட்டோரும் சென்றார்கள்.. பாமக நிறுவனர் ராமதாஸ், எம்பி அன்புமணி ராமதாஸை சந்தித்து பேசினர்.. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர். பிறகு அது சம்பந்தமான மனுவையும் அன்புமணியிடம் அளித்தனர்.
ராமதாஸ்
மனுவைப் பெற்றுக்கொண்ட ராமதாஸ் அவர்களிடம் பேசியதாவது: "நான் தொப்பி அணியாத ஒரு முஸ்லிம், உங்களில் ஒருவன்... உங்களை சிறுபான்மை என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு எல்லாம் இங்கு கிடையாது.. ஒரு கிராமத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தால் அக்குடும்பத்திற்கு பிரச்சினை ஏற்படும்போது, அவர்களை ஒரு குடும்பம் என்று நினைக்காதீர்கள். நாங்கள் இருக்கிறோம் என்று ஆதரவு அளியுங்கள்.
பாமக ஆதரவு
தமிழகத்தில் எல்லா உரிமைகளோடு நாம் வாழ்வோம்... அதற்கு எல்லா விதமான பாதுகாப்புகளையும் பாமக நிச்சயம் அளிக்கும். குடியுரிமை சட்டம் குறித்து நானும் கவனித்து வருகிறேன்" என்றார். இதையடுத்து, இஸ்லாமிய சமுதாயத்துக்கு என்றுமே பாமக ஆதரவாக இருக்கும் என்பதும், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தன்னுடைய முழு எதிர்ப்பையும் தொடர்ந்து அளித்து வருகிறது என்பதும் டாக்டரின் இந்த பேச்சின் மூலம் உணர முடிகிறது!