ஊரடங்கிலும் அடங்காத புள்ளிங்கோ.. பட்டா கத்தியில் கேக் வெட்டி.. பிறந்தநாள் கொண்டாட்டம்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டாகத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 5 வாலிபர்கள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வருவதற்கும், கூட்டமாக கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் பலர் வீதிகளில் சுற்றி திரிகின்றனர்.
இவர்களை போலீசார் அவ்வப்போது பிடித்து தங்கள் பானியில் கவனித்து அனுப்பினாலும், ஒரு சில இளைஞர்கள் அடங்கியபாடில்லை. இந்நிலையில் விழுப்புரத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்கள் சுந்தரமூர்த்தி, பாண்டியன், தமிழ் அழகன், கணபதி உள்ளிட்டோர் வீரபாண்டி கிராமம் ராஜபாளையம் தெருவில் இரவில் ஒன்று கூடியுள்ளனர். பின்னர்
நண்பர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்ட ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
மேலும் மணிகண்டனின் பிறந்தநாள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பட்டா கத்தியை மணிகண்டனிடம் கொடுத்து கேக் வெட்ட செய்துள்ளனர். இதனை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
சமூக வலைதளம் மூலமாக இந்த வீடியோவை பார்த்த அரகண்டநல்லூர் காவல்நிலைய போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஊரடங்கில் வீட்டில் அடங்கி இருக்காமல், பட்டா கத்தியால் கேக் வெட்டி தற்போது சிறையில் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் இந்த வாலிபர்கள்.