இருக்கட்டும்.. விநாயகர் சதுர்த்தி விழா வரட்டும்.. பார்த்துக்கறேன்.. என்ன எச். ராஜா இப்படி பேசுகிறார்
தமிழக காவல்துறையினர் மீது எச்.ராஜா குற்றஞ்சாட்டி உள்ளார்
விழுப்புரம்: "இந்துக்களை தொடலாம்ன்னு நினைக்கறீங்க... தமிழ்நாட்டில், இந்துக்கள் என்ன இரண்டாம் தர குடிமகன்களா? சந்தேகமாக இருக்கு.. விநாயகர் சதுர்த்தி விழா வரட்டும்.. பார்த்துக்கறேன்" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சவால் விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அப்போது அவர் சொன்னதாவது:
"குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு ஆதரவாக வரும் 28ம் தேதி பாஜக சார்பில் பேரணி நடத்தப்படும்... இந்த பேரணியானது அமைதியான முறையில் நடக்கும்.. போலீசாரின் மீது கல்வீச்சு போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இந்த பேரணியில் நடக்காது. தேசபக்தியை உணர்த்தும் வகையில் இந்த பேரணி நடைபெறும்.
சிஏஏ - கண்டனம்
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக போராடியவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. சிஏஏ போராட்டம் என்பது மாறி, தற்போது இந்து சமுதாயத்துக்கு எதிரான போராட்டமாக மாறி கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில், இந்துக்கள் என்ன இரண்டாம் தர குடிமகன்களா? சந்தேகமாக இருக்கு.. காவல்துறையின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விநாயகர் சதுர்த்தி
இந்துக்களை தொடலாம்ன்னு நினைக்கறீங்க... நான் விநாயகர் சதுர்த்தி வரட்டும், நான் பார்த்துக்கறேன்.. இதை சவாலாகூட எடுத்துக்குங்க.. எங்கியும் அனுமதி கேட்க மாட்டோம்.. எங்களுக்கு தேவை இல்லை. இந்த நாட்டில எந்த அனுமதியும் இல்லாமல் முஸ்லிம்கள் உட்காரலாம் என்றால், ஏன் இந்துக்கள் உட்கார கூடாது? மசூதியில் இருந்து நேரா வந்து கல்லை கொண்டு அடிக்கிறீங்க? போலீஸ் கையை கட்டிக்கிட்டிருக்கு.. ஆனால் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஒரு தனிநபர் போராடினால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யறாங்க..
ஸ்டாலின்
ஆக, தமிழ்நாட்டில் என்ன நடக்குது, சட்டத்தின் ஆளுமை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும்.. இவர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. தமிழகம் முழுவதும், அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடத்தி, வன்முறைகளை தூண்டுகின்றனர்.
மண் குதிரை
தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக சொல்கிறது.. 100 கோடி ஹிந்துக்கள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் என்னவாகும்ன்னு கொஞ்சம் யோசித்து பாருங்க.. தயவு செய்து, மண் குதிரை ஸ்டாலினை, முஸ்லிம் சகோதரர்கள் நம்ப வேண்டாம். முஸ்லிம்களை, ஸ்டாலின் துாண்டி விடுகிறார்" என்றார்.
|
ப.சிதம்பரம்
இதனிடையே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா ஒரு பதிவு போட்டுள்ளார்.. அதில், "இவர்களை ஆதரிக்கும் ப.சிதம்பரம், ஸ்டாலின் போன்றவர்கள் பொதுவாழ்விலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்" என்று குறிப்பிட்டு சிஏஏ எதிர்த்து போராடி வரும் பெண்கள் குறித்த போட்டோ ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் ஆதரவும், எதிர்ப்பும் என கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.