சி.வி.சண்முகத்துக்கு டிடிவி மாஸ்... விழுப்புரத்தில் தொண்டர்கள் அலை.. அமமுக ஒன்றிய செயலாளர் மயக்கம்
விழுப்புரம்: மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியுள்ள அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு உளுந்தூர்பேட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
அமமுகவை ஆரம்பித்து ஆளும் அதிமுகவுக்கு கடும் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருக்கும் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவும், அமமுகவின் துணை பொது செயலாளருமான டிடிவி தினகரனுக்கு போகின்ற இடம் எல்லாம் அக்கட்சியினர் பலத்த வரவேற்பை அளித்து வருகின்றனர்.
ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக அவர் மக்கள் சந்திப்பு என்ற பயணத்தை அறிவித்திருந்தார். பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணத்தை அறிவித்திருந்தார். அதன்படி, டிடிவி தினகரன் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமது பயணத்தை தொடங்கியுள்ளார்.
தொண்டர்கள் வரவேற்பு
உளுந்தூர்பேட்டையில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் வந்திருந்த அவருக்கு மாலைகள் தூவியும், உற்சாக குரல் எழுப்பியும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
நெருக்கடியடித்த கூட்டம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தலைமையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் சிக்கிய அவரது வாகனம் மெதுவாக அசைந்தபடி வந்தது. தொடர்ந்து கூட்டம் நெருக்கடித்ததால் பலமுறை டிடிவி தினகரனின் வாகனம் ஊர்ந்து சென்றது.
செல்போன்களில் ஒரு க்ளிக்
பல பகுதிகளில் கூட்ட நெரிசலால் அவரது வாகனம் நிற்கும் போதெல்லாம் தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அவரை காண கூடியிருந்தவர்களில் பலர்... தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மயங்கி விழுந்த கட்சி நிர்வாகி
மடப்பட்டு பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி திருநாவலூர் அமமுக ஒன்றிய செயலாளர் கே.ஜி.பி. ராஜாமணி மயங்கி கீழே விழுந்தார். அதனால், கூட்டத்தில் திடீர் பரபரப்பு எழுந்ததது. கூட்ட நெரிசலில் சிக்கிய அவரை மீட்ட தொண்டர்கள், விழுப்புரம் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
உற்சாகமான டிடிவி
கூட்டத்தினர் மத்தியில் டிடிவி தினகரனும் படு உற்சாகமாக காணப்பட்டார். தொண்டர்களை கண்டு அவரும் உற்சாகமாக கை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அமைச்சர் சண்முகத்துக்கு பதிலடி
கடந்த முறை விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தபோது... அமைச்சர் சி.வி. சண்முகத்தின் மேற்பார்வையில் அமமுக நிகழ்ச்சிக்கு நெருக்கடி கொடுக்கப் பட்டதாக ஒரு பேச்சு உண்டு. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கானவர்களுடன் டிடிவி தினகரன் மாஸ் காட்டிவிட்டதாக அவரது தொண்டர்கள் கூறியுள்ளனர்.
தொடர்கிறது மக்கள் சந்திப்பு
உச்ச நீதிமன்றத்தில் குக்கர்சின்னம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வர உள்ள நிலையில் தற்போது டிடிவி தினகரனுக்கு கூடியுள்ள கூட்டம் அனைத்து அரசியல் கட்சியினரையும் உற்றுபார்க்க வைத்துள்ளது. டிடிவி தினகரனின் மக்கள் சந்திப்பு பயணத்தில் முதல் கட்டம்.... விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி வரை இருப்பதால் அமமுகவினர் உற்சாகமாக உள்ளனர்.